இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் மவ்லாவி அமிர் கான் முத்தாகி ஆகியோர் இன்று தொலைபேசி மூலம் பேசினர்.
சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலை, தலிபான் அமைச்சர் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, அவரது கண்டனத்திற்கு அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உரையாடலைப் பற்றி ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
“இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்க, சிலர் வெளியிட்ட பொய்யான செய்திகள் உண்மையற்றவை என தலிபான் அமைச்சர் திட்டவட்டமாக மறுத்ததை வரவேற்கிறேன்” என்றார்.
மேலும், இந்த உரையாடலில் இந்தியா மற்றும் ஆப்கன் மக்களுக்கு இடையேயான பழமையான நட்பு, மற்றும் ஆப்கானிஸ்தான் முன்னேற்றத்தில் இந்தியாவின் பங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடல், இருநாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.