Publish Date: Fri, 11 Oct 2024 (09:38 IST)
Updated Date: Fri, 11 Oct 2024 (09:39 IST)
மேற்குவங்க மாநிலத்தில் இளநிலை மருத்துவர்கள் கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் நிலையில் 7வது நாளாகவும் போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் செய்த சில மருத்துவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு மருத்துவர்கள் கடந்த சில வாரங்களாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் இளநிலை மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து அதனை நடத்தி வரும் நிலையில் நேற்று நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் ஏழாவது நாளாக இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து நேற்று இரவு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.