டெல்லியில் 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் ஒருவர், "மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி" எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த தீரஜ் கன்சல் என்ற சிஏ அக்கவுண்டண்ட் நேற்று ஒரு விருந்தினர் மாளிகையில் அறை எடுத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீரஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீரஜ் கன்சல் தனது அறையில் ஒரு ஹீலியம் வாயு சிலிண்டரை வைத்திருந்ததாகவும், ஹீலியம் வாயுவை சுவாசித்துத் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் விட்டு சென்ற தற்கொலைக் கடிதத்தில், தனது தந்தை 2003 இல் இறந்ததிலிருந்து தான் தனியாக இருப்பதாகவும், தந்தை மரணத்திற்கு பிறகு தாய் வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை கடிதத்தில், தனது மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல என்று குறிப்பிட்டுள்ள தீரஜ் கன்சல், "மரணம் என்பது வாழ்க்கையின் மிக அழகான பகுதி என்பதை புரிந்துகொண்டேன். என் வாழ்க்கையின் மிக சோகமான பகுதி என் பிறப்பு என்பதால் மரணத்தை நோக்கிச் செல்கிறேன். நான் யாரிடமும் ஆழமான தொடர்பு கொண்டதில்லை; யாருக்கும் என் உடன் தொடர்பு இல்லை," என்றும் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.