ஆன்லைன் விளையாட்டில் நஷ்டம் அடைந்ததால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் மற்றும் அவருடைய மனைவி, ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் பழக்கம் கொண்டிருந்ததாக தெரிகிறது.
முதலில், சாதாரண பொழுதுபோக்காக ஆரம்பித்து, அதன் பின் சீரியஸாக இருவரும் மாறி மாறி விளையாடி உள்ளனர். இதில் இருவருக்கும் சேர்ந்து ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தீபக் மனைவி தன்னுடைய சகோதரியிடம், "மீளவே முடியாத நஷ்டம் ஏற்பட்டு விட்டது. அதனால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வதை தவிர இல்லை; வேறு வழி இல்லை," என்று மொபைலில் கூறி அழுதுள்ளார்.
அப்போது, அவரது சகோதரி, "பணத்தை நான் ஏற்பாடு செய்து தருகிறேன். கடனை அடைத்து விடலாம். தவறான முடிவு எடுத்து விட வேண்டாம்," என்று கூறிய நிலையில், அதையும் கேட்காமல் இருவரும் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதனால், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட கடனே, இந்த தம்பதியின் தற்கொலைக்கு காரணம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், இருப்பினும் முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.