காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரணிதி ஷிண்டே, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை கருப்பு நாள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீசை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு அறிவிக்கப்படாத அவசரநிலையை நோக்கி செல்வதாகவும், எதிர்க்கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை என்றும், வாக்குகள் திருடப்படுவதாகவும் ஷிண்டே குறிப்பிட்டார். பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஊடகங்கள் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர் விமர்சித்தார். விவசாயிகளின் போராட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தானுடன் சண்டை போடும் அதே வேளையில், அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுகிறோம் என்றும், இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சோலாப்பூர் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஷிண்டே வலியுறுத்தினார். கடந்த நான்கு ஆண்டுகளாக சோலாப்பூர் நகராட்சித் தேர்தல்கள் நடத்தப்படாதது ஜனநாயகப் படுகொலை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.