Publish Date: Tue, 26 May 2020 (19:50 IST)
Updated Date: Tue, 26 May 2020 (20:00 IST)
எல்லையில் சீன ராணுவம் படைக்குவிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் சீனா, இந்திய எல்லையில் ராணுவ படைகளை குவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லடாக் பகுதிக்கு அருகே சீன ராணுவம் படைகளை குவித்து வருவதாகவும் இதனால் இந்தியாவில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் சீன ராணுவம் தனது படைகளை குவித்து வருவதன் எதிரொலியாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை செய்து உள்ளார். பாதுகாப்புத் துறை உயரதிகாரிகளுடன் அவர் ஆலோசனை செய்து வருவதாகவும், முப்படை தளபதிகள் மற்றும் மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சீன ராணுவம் எல்லை தாண்டி தாக்கினால் அதற்கு பதிலடி கொடுக்க தயாராக இருக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து பிரதமர் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய சீன எல்லையில் பதட்டம் இருந்தது. ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்த கடந்த சில மாதங்களில் இந்த பதட்டம் குறைந்து இருந்தது. தற்போது சீனா மீண்டும் கொரோனா நோய் பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் மீண்டும் எல்லையில் பதட்டத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது