Publish Date: Sun, 13 May 2018 (12:32 IST)
Updated Date: Sun, 13 May 2018 (12:36 IST)
கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் நேற்று 222 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் பாஜக வெற்றி பெறும் என்றும் இல்லை இல்லை எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும் கருத்துக்கணிப்புகள் குழப்பி வருகின்றன. ஆனால் அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி இம்மாநிலத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க தேவையான 113 தொகுதிகளில் வெற்றி பெறாது என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் மதச்சார்ப்பற்ற ஜனதா தள கட்சியின் ஆதரவு எந்த கூட்டணிக்கு கிடைக்கின்றதோ, அந்த கட்சியே ஆட்சி அமைக்கும் என்ற நிலை ஏற்பட வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. அப்படி ஒரு நிலைமை வந்தால் ஏற்கனவே அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது போல் பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு அதிகம் என்றும், இதற்காக மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர்களுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது
மேலும் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவகவுடாவுடன் பிரதமர் மோடி இதுகுறித்து ரகசிய ஆலோசனை செய்துள்ளதாவும், தேர்தல் முடிந்த நிலையில் பாஜக மேலிடத் தலைவர்கள் மதச்சார்பற்ற ஜனதா தள மூத்த தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதே நேரத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் என்ற பெயருடைய கட்சியை வைத்து கொண்டு மதவாத கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்றும், தேவகெளடா காங்கிரஸ் கட்சிக்கு தான் ஆதரவு கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.