Publish Date: Mon, 03 Aug 2020 (08:35 IST)
Updated Date: Mon, 03 Aug 2020 (08:37 IST)
அயோத்தியில் ராமர் கோவில் அடுக்கல் நாட்டு விழாவில் அத்வானி நேரில் கலந்து கொள்ளவில்லை என்றும், பாபா ராம்தேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் நாளை மறுநாள் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நடும் விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி மக்களை ஒன்றிணைக்க தொடங்கியவர் பாஜக முன்னாள் தலைவர் எல்.கே.அத்வானி. இதற்காக 1991ல் தேசிய அளவிலான ரத யாத்திரையையும் நடத்தினார். ஆனால் தற்போது அவர் ராமர் கோவில் அடிக்கல் நடும் விழாவில் நேரில் கலந்து கொள்ளவில்லை. வயது மூப்பின் காரணமாகவும், கொரோனா நடவடிக்கைகளாலும் அவர் டெல்லியிலிருந்து காணொளி மூலமாக இதை காண உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மொத்தம் 200 பேர் வரை ராமர் கோவில் விழாவில் அனுமதிக்க இருந்த நிலையில் தற்போது 170 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் குறையலாம் என கூறப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், விஸ்வ ஹிந்து ப்ரிஷத் சார்பில் அலோக் குமார் உள்ளிட்டோரும் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாபா ராம்தேவ் கலந்து கொள்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.