பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை மீண்டும் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று ராம மந்திர ஆசிரமத்தில் ஜெனரல் உபேந்திரத் துவிவேதிக்கு ஆன்மிக ஆசான் வேண்டுகோள் விடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய இராணுவத் தலைவர் ஜெனரல் உபேந்திரத் துவிவேதி, மத்தியப் பிரதேசம், சித்ரகூட்டில் உள்ள ஆன்மிகத் தலைவர் ஜகத்குரு ஸ்வாமி ராமபத்ராசார்யா அவர்களின் ஆசிரமத்தை அண்மையில் விஜயம் செய்தார். அப்போது அவர் ஆன்மிக ஆசானின் ஆசி பெற்றார். இந்த சந்திப்பின் போது, ஜகத்குரு, இராணுவ தலைவரிடம் ஒரு முக்கிய வேண்டுகோளை வைத்தார். அது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை மீண்டும் இந்தியாவுடன் இணைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, ஹனுமான் பகவான் சீதாதேவியிடம் பெற்ற ராம மந்திரத்தை ஜெனரல் துவிவேதிக்கு உபதேசமாக வழங்கியதாக ஜகத்குரு தெரிவித்தார். அதன்பின், “நான் இதுவரை யாரிடமும் கேட்காத ஒன்றை உங்களிடம் கேட்கிறேன்... எனக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த காஷ்மீர் வேணும்," என்று கேட்டதாகவும் கூறினார். அதற்கு ஜெனரல் துவிவேதி, கண்டிப்பாக அது நடக்கும் என கூறியதாகவும் கூறப்படுகிறது.