கடந்த வாரம் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து, நாட்டையே உலுக்கியது. அந்த விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் விமானம் விழுந்த கட்டிடத்தில் இருந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த விமான விபத்தின் அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது ஹெலிகாப்டர் விபத்து ஒன்று நடந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் மேலும் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் இருந்து கேதார்நாத் சென்ற ஒரு ஹெலிகாப்டர், கௌரிகுண்ட் என்ற வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து, மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
முதல் கட்ட தகவலின்படி, இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானி உட்பட அனைவரும் உயிரிழந்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவம் பெரும் சோகத்தையும், நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.