உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் என்ற பகுதியில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென ஹெலிகாப்டர் சாலையில் இறக்கப்பட்டதால், சாலையில் சென்ற வாகனங்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேதார்நாத் என்ற இடத்தில், ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அடுத்து அந்த பைலட் அவசரமாக ஹெலிகாப்டரை சாலையில் தரை இறக்கினார். இதனால் ஹெலிகாப்டரின் வால் பகுதி மோதியதில், சாலையில் சென்ற கார் ஒன்று சேதமடைந்ததாகவும், மேலும் சில வாகனங்கள் லேசான சேதம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, ஹெலிகாப்டர் பைலட்டுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
திடீரென சாலையில் ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும், இதன் காரணமாக அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மாவட்ட காவல்துறை வழக்கு பதிவு செய்து, பைலட் இடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.