பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் கௌஷிக் முகர்ஜி, "இந்த மொழி குழப்பம் தொடர்வதாக இருந்தால், கன்னடம் பேசத் தெரியாத எனது நிறுவனத்தின் ஊழியர்கள் அடுத்த 'இலக்காக' மாற வேண்டாமே என நினைக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், தனது நிறுவன அலுவலை 6 மாதங்களில் புனேக்கு மாற்றப் போவதாகவும், இது அவரது ஊழியர்கள் எழுப்பிய கவலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகவும் விளக்கியுள்ளார்.
சமீபத்தில் பெங்களூரு சந்தாபுரா பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியில், ஒரு மேலாளர், “இது இந்தியா; நான் இந்தி பேசுவேன், கன்னடம் பேசமாட்டேன்” என்று கூறிய வீடியோ வைரலானது. இதற்கு கன்னட அமைப்புகள், அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைப் பகிர்ந்த பெங்களூரு தெற்கு எம்.பி தேஜஸ்வி சூர்யா, "கர்நாடகாவில் வாடிக்கையாளர் சேவையில் பணியாற்றும் ஊழியர்கள், உள்ளூர் மொழியில் பேசத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்" என்றார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேலாளரின் நடத்தை கண்டிக்கத்தக்கது என்றும், நாடு முழுவதும் வங்கி ஊழியர்களுக்கு கலாசார மற்றும் மொழிப் பயிற்சி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலாளர் பின்னர் மன்னிப்பு கூறி, எதிர்காலத்தில் மொழி தொடர்பாக கவனம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில்தான் எஸ்பிஐ ஊழியருக்கு நேர்ந்த நிலைமை என்னுடைய நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் ஏற்படக்கூடாது. மொழி வெறியோடு இருக்கும் மாநிலத்திலிருந்து எனது நிறுவனத்தை புனே நகருக்கு மாற்ற போகிறேன் என்று கௌஷிக் முகர்ஜி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று வேறு சில பெங்களூரு நிறுவனங்களும் இடமாற்றும் குறித்து ஆலோசித்து வருகிறது.