Publish Date: Thu, 19 Sep 2024 (10:08 IST)
Updated Date: Thu, 19 Sep 2024 (10:10 IST)
கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான முனிரத்னா மீது காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே அவர் ஒப்பந்ததாரரை சாதி ரீதியில் மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினரான முனிரத்னா மீது பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண் ராம்நகரா மாவட்ட காவல் நிலையத்தில் பாலியல் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், முனிரத்னாவையும் மேலும் 7 பேரையும் சாட்டி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டிய பெண்ணிடம் காவல் துணை ஆணையர் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றார்.
முன்னதாக, சாதி ரீதியில் கொலை மிரட்டல் விடுத்ததாக முனிரத்னா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு எதிராக தலித் சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனை காங்கிரஸ், பாஜகவுக்கு எதிரான அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது என கூறப்பட்டு வருகிறது.