போலி வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 85 தெலுங்கு பேசும் இளைஞர்கள் மீட்கப்பட்டதாகவும், இந்த குற்றத்தை செய்த 20 பேர் கைது செய்யப்பட்டதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டேட்டா எண்ட்ரி வேலை வழங்கப்படும் என்ற போலியான வாக்குறுதியுடன், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தாய்லாந்து, கம்போடியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த இளைஞர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அங்கு அவர்கள் மோசடி மையங்களுக்கு அனுப்பப்பட்டு, ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கு பேசும் இளைஞர்கள் மற்றும் இந்த போலி வேலைவாய்ப்பு அலுவலகத்தால் 500 பேர் கடத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த மோசடி ஏஜென்ட்களில் ஒருவரான சுரேஷ் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் இரண்டு பேரை கடத்த இருந்த சம்பவம் தடுக்கப்பட்டது. மேலும், இந்த மோசடியில் விஜயகுமார் மற்றும் சன்னி ஆகிய இருவர் தான் முக்கிய குற்றவாளிகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட இளைஞர்கள் ஆன்லைன் மோசடி செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மோசடி மூலம் கிடைக்கும் பணம் அனைத்தும் கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு சிங்கப்பூருக்கு அனுப்பப்படுவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுவரை போலி வேலைவாய்ப்பு அலுவலகத்தால் தெலுங்கானாவில் இருந்து அனுப்பப்பட்ட 85 இளைஞர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இன்னும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இளைஞர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெலுங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது.