மத்தியப் பிரதேசம், கண்ட்வா மாவட்டத்தின் கல்வா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், 45 வயதுள்ள பெண் ஒருவருக்கு பயங்கரமான பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டார்.
திருமண விழாவிற்கு செல்வதாக கூறி கடந்த சனிக்கிழமை வீட்டைவிட்டு வெளியேறிய இந்த பெண் பின்னர் மோசமான காயங்களுடன் மயங்கி கிடந்த நிலையில் மீட்கப்பட்டார். ஆழமான காயங்களால் அதிகமாக இரத்தம் இழந்ததால் அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, பெண்ணின் பிறப்பு உறுப்புகள் மரக்கட்டையாலும் இரும்புக் கம்பியாலும் தாக்கப்பட்டுள்ளன. மேலும், அவரது கருப்பை கட்டாயமாக அகற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுவே மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சுனில் மற்றும் ஹரி என்ற 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் அந்த பெண்ணை நன்கு அறிந்தவர்கள் என கூறப்படுகிறது. குற்றம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இன்று அரசு மருத்துவமனையில், உள்ளூர் மருத்துவக் கல்லூரி நீதிமன்ற மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையில், குழு பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது. அதன் அறிக்கை வெளியான பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.