Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெரினாவில் அலங்கார ஊர்திகள்; ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு!

மெரினாவில் அலங்கார ஊர்திகள்; ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு!
, புதன், 23 பிப்ரவரி 2022 (11:50 IST)
குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட அலங்கார ஊர்திகள் சென்னை மெரினாவில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த ஊர்திகள் மேலும் ஒரு வாரம் அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
சென்னையில் கடந்த குடியரசு தினம் அன்று விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் மூன்று அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
 
அதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கண்டு களிக்கும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஜனவரி 26 அன்று அந்த ஊர்திகளை சென்னை தீவுத்திடலில் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்ட மக்களிடையே சென்று மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த அலங்கார ஊர்திகள் சென்னை நகர மக்கள் கண்டு களித்திடும் வகையில் சென்னை மெரினா கடற்கரை இணைப்பு சாலையில் விவேகானந்தர் இல்லம் எதிரே பொதுமக்களின் பார்வைக்கு பிப்ரவரி 20 முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
 
நாள்தோறும் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகளும் பெரும் திரளாக இந்த அலங்கார ஊர்திகளை பார்வையிட்டு வருகின்றனர். மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பிப்ரவரி 21 ஆம் தேதி அன்று இந்த ஊர்திகளை பார்வையிட்டு அங்கு பெரும் திரளாக கூடி இருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
 
சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வார காலத்திற்கு அவ்விடத்தில் இந்த அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும் என முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

15 ஆண்டுகால பருத்திவீரன்: நடிகர் கார்த்தி டுவிட்