வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாகவும், அருணகிரிநாதருக்கு முருகன் அருள் பெற்ற இடமாகவும் புகழ் பெற்றது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தும் திட்டம் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.5 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு, அவை நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கான யாக பூஜைகள் கடந்த 14-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின. தொடர்ந்து யஜமான சங்கல்பம், புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை உள்ளிட்டவை நடந்தன.
இன்று அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால யாக பூஜை நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டது. பின்னர், காலை 9.15 மணிக்கு ராஜகோபுரங்கள், விமானங்கள், மூலஸ்தானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகத்தை நடத்தினர். லட்சக்கணக்கான பக்தர்கள் "அரோகரா" முழக்கத்துடன் திருப்பணியின் நிறைவைக் கொண்டாடினர்.
மதியம் 12.15 மணிக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகத்திற்காக திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம், இரவு 9 மணிக்கு வீதி உலா ஆகியவை நடைபெறுகின்றன. நாளை முதல் மண்டலாபிஷேகம் தொடங்கவுள்ளது.