ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோயில், சிவபெருமானுக்கு உரிய புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளிப்பதன் மூலம் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதன் காரணமாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வருகை தருகின்றனர். அதிலும் குறிப்பாக, அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அந்த வகையில் இன்று ஆனி அமாவாசையை முன்னிட்டு, நேற்று முதலே ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு வர தொடங்கினர். இன்று அதிகாலையிலேயே அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். வட மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள், கடற்கரை மணலில் சிவலிங்கம் உருவாக்கி, அதற்கு பூஜை செய்து, பின்னர் அக்னி தீர்த்த கடலில் நீராடினர்.
புனித நீராடிய பக்தர்கள், ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீராடினர். அதன் பிறகு, நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையை முன்னிட்டு, கோயில் மற்றும் கடற்கரை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், ராமேஸ்வரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாகச் சிறப்பு அரசு பேருந்துகளும் இயக்கப்பட்டன.