துயரங்களை கண நேரத்தில் தீர்க்கும் ஆற்றல் கொண்டவரும், 'நாளை' என்ற தாமதத்திற்கு இடமளிக்காதவருமான நரசிம்மர் மகாவிஷ்ணுவின் சக்தி வாய்ந்த அவதாரமாகக் கருதப்படுகிறார்.
பக்தன் பிரகலாதனுக்காக தூணில் இருந்து வெளிப்பட்டு இரணியனை வதம் செய்த நரசிம்மரின் காட்சியை காண சப்த ரிஷிகள் கடும் தவம் செய்தனர். அவர்களுக்காக ஒரு நாழிகைக்குள் நரசிம்ம மூர்த்தியாக மகாவிஷ்ணு காட்சியளித்து அருள் புரிந்தார்.
தங்களுக்கு கிடைத்த இந்த அரிய தரிசனம் பொதுமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று ரிஷிகள் வேண்டினர். அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நரசிம்மர், சோளிங்கர் தலத்தில் ஆண்டு முழுவதும் கண் மூடி யோக நிலையில் இருப்பதாகவும், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்குத் தரிசனம் அளிப்பதாகவும் உறுதியளித்தார்.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் சோளிங்கர் யோக நரசிம்மர் கண் திறந்து அருள் பாலிக்கும் இந்த அதிசயத்தை காண தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.