Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா.. குவிந்த பக்தர்கள்

Advertiesment
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா.. குவிந்த பக்தர்கள்

Mahendran

, வியாழன், 27 மார்ச் 2025 (18:17 IST)
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், சக்தி தலங்களில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. தமிழ் மாநிலத்திலிருந்து மட்டுமல்லாது, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலுமிருந்து பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து வழிபடுவது வழக்கமாக இருக்கிறது.
 
இதன் தனிச்சிறப்பாக, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை, 28 நாட்கள் அம்மன் பச்சைப்பட்டினி விரதம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விரதம், உலக நன்மை கருதி மற்றும் தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைத்து தடைகளையும் கடந்து சவுபாக்கியம் பெறவும் அம்மனால் மேற்கொள்ளப்படுவதாக ஐதிகம் கூறுகிறது.
 
இந்த ஆண்டு, மாரியம்மனின் பச்சைப்பட்டினி விரதம் கடந்த மார்ச் 9-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வழக்கமாக, சமயபுரம் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன, அதற்கேற்ப ஆறு விதமான உணவுப்பொருட்கள் ‘தளிகை’ என நைவேத்தியமாக படைக்கப்படும். ஆனால், இந்த 28 நாட்கள், எந்தவொரு சமைத்த உணவுகளும் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கப்படாது. இளநீர், பானகம், உப்பில்லாத நீர்மோர், துள்ளுமாவு, கரும்பு, பழங்கள் போன்ற இயற்கையான உணவுப் பொருட்களே அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படும்.
 
இந்த விரத காலத்தில், அம்மனின் முகத்தில் சிறு சோர்வு காணப்படலாம் என்று பக்தர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால், அம்மனை குளிர்விக்க, கோவில் வளாகத்தில் பூச்சொரிதல் விழா நடத்தப்படுவது வழக்கம். விரத நாட்களில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இந்த பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறும்.
 
அந்தவகையில், இந்த ஆண்டு சமயபுரம் கோவிலில் நான்காவது வார பூச்சொரிதல் விழா மார்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் கூடிய வருவதை கருத்தில் கொண்டு, அவர்கள் அமைதியாக வழிபட சகிதமாக குழு, குழுவாக பிரித்து பூக்கள் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் பாதுகாப்பாக இருக்கவும், சன்னதி வீதியின் நுழைவாயிலிலிருந்து ராஜகோபுரம் வரை பத்து இடங்களில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – விருச்சிகம்!