திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி தொடங்கிய புனிதமான வைகுண்ட துவார தரிசனம் நேற்றுடன் இனிதே நிறைவுற்றது. இன்று அதிகாலை நடைபெற்ற ஏகாந்த சேவைக்கு பிறகு வைகுண்ட வாசல் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று முதல் திருமலையில் ஆர்ஜித சேவைகள் மற்றும் கட்டண தரிசனங்கள் உள்ளிட்ட வழக்கமான வழிபாட்டு முறைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. தேவஸ்தானம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் 7,83,411 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர்.
கட்டுக்கடங்காத கூட்டம் நிலவிய போதிலும், அதிகாரிகள் ஒருங்கிணைந்து எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி பக்தர்களை வழிநடத்தினர். பக்தர்களின் வருகையை போலவே உண்டியல் வருவாயும் மலைக்க வைத்துள்ளது; இந்த 10 நாட்களில் மட்டும் மொத்தம் 40.43 கோடி ரூபாய் காணிக்கையாகக் கிடைத்துள்ளது.
இது முந்தைய ஆண்டுகளின் வசூல் சாதனைகளை முறியடித்துள்ளதாகத் தேவஸ்தான அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.