திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உட்பிரிவான தூண்டுகை விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் விழா வரும் ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இவ்விழாவை முன்னிட்டு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் பூஜைகள் ஆரம்பமாகும். அதன் பின், ஏப்ரல் 18ஆம் தேதி முதல், ஆலயத்துக்கு அருகிலுள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் கால யாகசாலை பூஜைகள் நடைபெறவுள்ளன.
அதன்பின் ஏப்ரல் 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தூண்டுகை விநாயகர் கோபுர கலசத்திற்கும், காலை 10.15 மணிக்கு மூலஸ்தானத்திற்கும் மகா கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெறும். அதன் பின், மகா அபிஷேகமும் சிறப்பாக நடைபெறும்.
மதியம் அன்னதானம் வழங்கப்படும். மாலை 6 மணி முதல் பிரசன்ன பூஜையும், புஷ்பாஞ்சலி அலங்காரத்துடன் நடைபெற உள்ளது.
இந்த விழாவை திருக்கோயில் தக்கார் ரா. அருள்முருகன், இணை ஆணையாளர் சு. ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.