திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழாவிற்கு செல்ல சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கி விமர்சையாக நடந்து வருகிறது. கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்வாக வரும் 27ம் தேதி திங்கட்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. அதை காண தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மக்கள் திருச்செந்தூர் சென்று வர பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து வரும் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து மேற்கண்ட ஊர்களுக்கு திரும்ப செல்லவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் TNSTC இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K