Publish Date: Sat, 01 Mar 2025 (18:30 IST)
Updated Date: Sat, 01 Mar 2025 (17:46 IST)
இலை மற்றும் தழைகளை உணவாக உட்கொள்ளும் விலங்குகள் அவற்றில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் நேரடியாக பெறுகின்றன. ஆனால், மனிதர்கள் பெரும்பாலும் காய்கறிகளை சமைத்து உண்பதால் பல முக்கிய சத்துக்கள் வீணாகி விடுகின்றன.
இதை தவிர்க்க, பல நாடுகளில் செடிகளின் இளந்தளிர்களை 'சாலட்' ஆக உட்கொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ளது. சிறப்பாக தேர்ந்தெடுத்த காய்கறிகள் மற்றும் தானியங்களை சிறிய தட்டுகளில் வளர்த்து, அவை முளை விடும் பருவத்தில் சேகரித்து உணவாக பயன்படுத்துகின்றனர். இதையே மைக்ரோ கிரீன் என அழைக்கின்றனர்.
இந்த முறையில் வளர்க்கப்படும் தாவரங்கள் எந்த ரசாயன பூச்சிமருந்துகளும் இல்லாமல், இயற்கையாகவே வளரும். இளம் தளிர்களில் செறிந்த சுவையும், அதிக ஊட்டச்சத்துக்களும் உள்ளன. வைட்டமின்கள், தாதுக்கள், அஸ்கார்பிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது உணவாக உட்கொள்ள மிகச்சிறந்த தேர்வாகும்.
மைக்ரோ கிரீன்ஸ், உடல் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கி, இதய நோய், வகை-2 நீரிழிவு, சில வகை புற்றுநோய் மற்றும் உடல் பருமன் ஆகியவை ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கையான ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மைக்ரோ கிரீன்ஸ் சிறந்த மாற்றாக இருக்கலாம்.