நேற்று நடந்த ஐபிஎல் போட்டி இந்த சீசனின் மறக்க முடியாதப் போட்டியாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது. குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து உலகக் கிரிக்கெட்டை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அவரின் இந்த இன்னிங்ஸில் 11 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடக்கம். ஐபிஎல் கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லுக்குப் பிறகு குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற பெருமையை சூர்யவன்ஷி பெற்றுள்ளார்.
பவுலர்களைக் கொஞ்சம் கூட மதிக்காமல் அனைத்துப் பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பும் பேராசையோடு நேற்று வைபவ்வின் இந்த இன்னிங்ஸ் அமைந்தது. அவரின் இந்த இன்னிங்ஸ் பல முன்னாள் ஜாம்பவான்களையே ஆச்சர்யத்தில் மூழ்க வைத்துள்ளது.
வைபவ்வின் இந்த இன்னிங்ஸ் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள யுவ்ராஜ் சிங் “14 வயதில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இந்த சிறுவன் கண்ணிமைக்காமல் உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்குகிறான். வைபவ் சூர்யவன்ஷி – இந்த பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த தலைமுறையினர் பிரகாசிப்பதைப் பார்த்து பெருமை கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.