நேற்று நடந்த பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளது. நேற்றைய போட்டியில், டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து எட்டு இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனை அடுத்து, 163 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியில் முதலில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்கள் விழுந்து அந்த அணித் தடுமாறியது. அப்போது விராட் கோலியுடன் கூட்டணி அமைத்த க்ருனாள் பாண்ட்யா மிகச்சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்தப் போட்டியில் க்ருணால் பாண்டியா அதிரடியாக விளையாடி 73 ரன்கள் அடித்த நிலையில் அவர் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தப் போட்டியில் ஆர் சி பி அணி பேட் செய்துகொண்டிருக்கும் போது நான்காவது ஓவரில் டெல்லி அணியினர் ஃபீல்டிங்கை செட் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டனர். அப்போது களத்தில் இருந்த கோலி “ஏன் இவ்வளவு நேரம்?” எனக் கோபத்தை வெளிப்படுத்தினார். அப்போது அவரருகில் இருந்த கே எல் ராகுல் அவரை சமாதானப்படுத்தும் விதமாகப் பேசி சூழலை சரிசெய்தார். இந்த சம்பவம் போட்டியின் போது சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.