Publish Date: Tue, 08 Jul 2025 (08:09 IST)
Updated Date: Tue, 08 Jul 2025 (08:38 IST)
தென்னாப்பிரிக்கா அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரில் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. அதனால் வியான் முல்டர் கேப்டன் பொறுப்பேற்றுள்ளார்.
தற்போது நடந்து வரும் இரண்டாவது போட்டியில் வியான் முல்டர் முச்சதம் அடித்துக் கலக்கியுள்ளார். முதல் இன்னிங்ஸில் பேட் செய்த அவர் 334 பந்துகளில் 367 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ரன்களான லாராவின் 400 ரன்கள் என்ற சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிக்ளேர் செய்து அதிர்ச்சியைக் கொடுத்தார்.
இதுபற்றி பின்னர் எழுப்பப்பட்ட கேள்விக்கு விடையளித்த அவர் “நாங்கள் போதுமான ரன்களை சேர்த்துவிட்டதாக நினைத்தோம். பிரையன் லாரா ஒரு லெஜண்ட் வீரர். அதனால் அதுவே உண்மையான சாதனையாக இருக்கட்டும். எனக்கு இன்னொரு முறை அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் கூட நான் இந்த முடிவையே மீண்டும் எடுப்பேன். லெஜண்ட்களே அதுபோல பெரிய ஸ்கோர்களை பெற்றிருக்க வேண்டும்” என தன்னடகத்துடன் பேசியுள்ளார்.