Publish Date: Mon, 21 Apr 2025 (08:50 IST)
Updated Date: Mon, 21 Apr 2025 (08:59 IST)
நேற்று ஐபிஎல் சூப்பர் ஞாயிறில் நடந்த முதல் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி பஞ்சாப் அணியை 157 ரன்களுக்குள் சுருட்டியது. பஞ்சாப் அதிரடியாக தொடங்கினாலும் அந்த அணி ஒரு கட்டத்தில் விக்கெட்களை இழக்க பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை.
இதையடுத்து ஆடிய பெங்களூரு அணி இலக்கை எளிதாக எட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். ஆட்டநாயகன் விருது பெற்றுவிட்டு பேசிய கோலி “உண்மையிலேயே இந்த ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது தேவதத் படிக்கல்தான். அவருக்குதான் இந்த ஆட்டநாயகன் விருது சென்றிருக்க வேண்டும். ஆனால் என்னை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
என்னுடைய வேலை அணியில் விக்கெட்டை இழக்காமல் ஒருமுனையில் நின்று போட்டியை நிறைவு செய்வது. இளம் வீரர்கள் பலர் அணியில் பசியோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு உறுதுணையாக செயல்படுவது. அதை இன்று நான் செய்துள்ளதாக நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.