தற்போது இந்தியக் கிரிக்கெட் வடிவத்துக்கும் பிரத்யேகமான அணி உருவாகியுள்ளது. டெஸ்ட், டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தனித்துவம் மிக்க வீரர்களும் உருவாகியுள்ளனர். இதனால் ஒரே வீரர் அனைத்து விதமான போட்டிகளிலும் இடம்பெறுவது இனி அரிதான விஷயம்தான்.
மிகச்சிறப்பாக விளையாடும் ஜெய்ஸ்வாலுக்கு டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இன்னும் இடம் கிடைக்கவில்லை. அதே போல ஸ்ரேயாஸ் ஐயருக்கும் சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. தற்போதைக்கு இந்திய அணியில் மூன்று விதமானப் போட்டிகளிலும் விளையாடும் வீரர்கள் என்றால் ஷுப்மன் கில், பும்ரா உள்ளிட்ட வெகுசிலர்தான். அந்த வரிசையில் சமீபத்தில் இடம்பிடித்துள்ளார் ஹர்ஷித் ராணா.
சிறப்பான பங்களிப்பை அளிக்காவிட்டாலும் அவர் தொடர்ந்து அணியில் எடுக்கப்படுகிறார். இது குறித்திப் பேசியுள்ளார் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் “இந்திய அணித் தேர்வால் வீரர்கள் பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள். என்ன அணியைத் தேர்வு செய்கிறார்கள் என்பதே குழப்பமாக உள்ளது. திடீரென அணியில் ஜெய்ஸ்வால் இருக்கிறார். பின்பு இல்லை. சஞ்சு சாம்சனுக்கும் இதேதான் நிலை. இப்போதைய நிலையில் இந்திய அணியில் ஒரேயொரு நிரந்தர வீரர்தான் உள்ளார். அவர் ஏன் அணியில் இருக்கிறார் என்று யாருக்குமே தெரியவில்லை. அவர் சினிமாத்தனமான சில சேஷ்டைகளை செய்கிறார். ஆனால் நீங்கள் நன்றாக பந்துவீசவில்லை என்றால் இது எதுவுமே பலிக்காது. கம்பீருக்கு ஆமாம் சாமி போட்டால் அணியில் இடம் கிடைக்கும் போலிருக்கிறது” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.