ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்னும் கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்று பஞ்சாப் கிங்ஸ் அணி. இதுவரை 18 சீசன்கள் நடந்துள்ள நிலையில் அந்த அணிக்கு 17 பேர் கேப்டனாக செயல்பட்டுள்ளனர். தற்போது 17 ஆவது கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டு வருகிறார்.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஸ்ரேயாஸ் ஐயர், உள்ளூர் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அதை இப்போது ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து வருகிறார். அவர் தலைமையில் பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் போட்டிக்கு தகுதி பெற்றது மட்டும் இல்லாமல் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக சொதப்பி வந்த பஞ்சாப் அணி ஸ்ரேயாஸ் தலைமையில் எழுச்சி பெற்றுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்நிலையில் அணியில் வீரர்கள் மற்றும் உறுதுணை பணியாளர்களை சமமாக நடத்துவது பற்றி பஞ்சாப் அணி வீரர் ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. அதில் இந்த சீசன் தொடங்கும்பொதே ஸ்ரேயாஸ் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகிய இருவரும் வீரர்களிடம் பேசும்போது அணியின் மூத்த வீரரான சஹாலுக்கும், பேருந்து ஓட்டுனருக்கும் நாம் ஒரே மரியாதையைக் கொடுப்போம்.” என்றனர். சொன்னது மட்டும் இல்லாமல் அதை செயல்படுத்தியும் வந்தனர்.” எனப் பேசியுள்ளார்.