நேற்றைய ஐபிஎல் போட்டியுடன் சிஎஸ்கேவுக்கான இந்த சீசன் போட்டிகள் முடிவடைந்த நிலையில் அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து எம் எஸ் தோனி பேசியுள்ளார்.
நடப்பு சீசனில் ஐபிஎல் போட்டிகளில் மிகவும் மோசமாகவே சிஎஸ்கே அணி விளையாடி வந்தது. சரியான அணி கட்டமைப்பு இல்லாதது போன்ற பல பிரச்சினைகள் இருந்த நிலையில், இந்த சீசனை அணியை பலப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக மாற்றிக் கொண்ட சிஎஸ்கே புதிய இளம் வீரர்களை அணிக்குள் இறக்கி பயிற்றுவிக்கத் தொடங்கியது. அதன் பலனாக நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த சீசனில் ஆரம்பம் முதலே சிஎஸ்கே நாயகன் தோனி சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை என்ற விமர்சனங்களும், அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற குரல்களும் ஒலித்து வந்தன. அதனால் இந்த சீசனோடு தோனி ஓய்வு பெறப் போகிறாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பிறகு பேசிய தோனி “ஓய்வு குறித்து முடிவு எடுக்க எனக்கு இன்னும் 4-5 மாதங்கள் அவகாசம் உள்ளதால் எந்த அவசரமும் இல்லை. உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும். திறமையை மெருகேற்ற வேண்டும்.
கிரிக்கெட் வீரர்கள் அவர்களுடையா அப்போதைய செயல்பாட்டை கொண்டு ஓய்வு பெற தொடங்கினால் சிலர் 22 வயதிலேயே ஓய்வு பெற வேண்டியிருக்கும். இப்போது நான் ராஞ்சிக்கு போகிறேன். வீட்டிற்கு சென்று பல மாதங்கள் ஆகிவிட்டது. சில பைக் பயணங்கள் செல்ல திட்டமிட்டுள்ளேன்.
நான் ஓய்வு பெற போகிறேன் என்று சொல்லவில்லை. அதேசமயம் திரும்ப வருவேன் என்றும் சொல்லவில்லை. அதை பற்றி யோசிக்க நிறைய நேரம் இருக்கிறது. யோசித்துவிட்டு பின்னர் முடிவை எடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K