நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி பலத்த பின்னடைவை சந்தித்த நிலையில், அடுத்த சீசனில் முக்கியமான பொறுப்புடன் சுரேஷ் ரெய்னா அணிக்குள் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்தது. மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி அதில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இருந்தாலும் நேற்றைய கடைசி போட்டியில் சிறப்பாக விளையாடி 230 ரன்களை குவித்து டேபிள் டாப்பரான குஜராத்தை வீழ்த்தி தாங்கள் அடுத்த சீசனுக்கு தயாராகி வருவதை சொல்லாமல் சொல்லியது.
சிஎஸ்கேவின் நேற்றைய வெற்றியைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா “கழுகுகள் 4 நாட்கள் பறக்காமல் இருந்துவிட்டால், வானம் புறாக்களுக்கு சொந்தமல்ல” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ஐபிஎல் கமெண்டரியில் பேசும்போது, அடுத்த வருடம் சிஎஸ்கே அணிக்கு ஒரு முக்கியமான நபரின் வருகை இருப்பதாக ரெய்னா கூற, ஆகாஷ் சோப்ரா அவர் யார் என கேட்டபோது, அவர்தான் அந்த அணிக்காக அதிவேக அரைசதத்தை வீழ்த்தியவர் என்று நாசூக்காக பதில் அளித்துள்ளார் ரெய்னா. அந்த அதிவேக அரைசதக்காரரே ரெய்னாதான்.
அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் கோச்சாக சுரேஷ் ரெய்னா வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிஎஸ்கேவின் ஆரம்ப காலங்கள் தொடங்கி ரசிகர்களுக்கு தல தோனி என்றால், சின்ன தல ரெய்னா. மீண்டும் இந்த ஜோடி சிஎஸ்கேவுக்காக ஒன்றாக செயல்பட உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K