50 ஓவர் உலகக் கோப்பை, டி 20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என கிரிக்கெட்டின் மிகப்பெரிய கோப்பைகளை எல்லாம் கைவசம் வைத்திருந்தாலும் விராட் கோலிக்குக் கடந்த 17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பை என்பது எட்டாக் கனியாக இருந்தது. அதை எட்டும் வகையில் கடந்த வாரம் கோலி படை ஐபிஎல் கோப்பையைக் கைகளில் ஏந்திவிட்டது.
ஆனால் சமீபகாலமாக கோலி அடுத்தடுத்து ஓய்வு முடிவுகளை அறிவித்து வருகிறார். ஏற்கனவே டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர், தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். இதனால் இந்தியக் கிரிக்கெட்டில் ஒரு திடீர் வெற்றிடம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் கோலி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. அதில் “கோலி ஆக்ரோஷமானவராக இருந்தாலும், அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை மறுக்க முடியாது. தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துத் தனி ஆளாகப் பல போட்டிகளை வென்றுள்ளார். அவரை போன்ற வீரர்களை மிகவும் மரியாதையுடன் நடத்த வேண்டும். மிகவும் கோபக்காரராக இருந்த கோலி, திருமணத்துக்குப் பிறகு மாறிவிட்டார்.” எனப் பேசியுள்ளார்.