பெங்களூரில் கள்ளக்காதலை கைவிட பெண் முடிவு செய்ததால் அவரை கள்ளக்காதலன் கொடூரமாக குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு அருகே உள்ள கெங்கேரி பகுதியில் வசித்து வருபவர் தாசேகவுடா. இவருக்கு ஹரிணி என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். சமீபத்தில் திருவிழா ஒன்றிற்கு சென்ற ஹரிணிக்கு, தலகட்டபுராவை சேர்ந்த யசஷ் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் போன் நம்பரை பகிர்ந்து கொண்ட நிலையில் அடிக்கடி குறுஞ்செய்தி, போன் கால் மூலமாக பேசி வந்துள்ளனர்.
நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி பல பகுதிகளில் விடுதிகளில் அறை எடுத்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த விஷயம் ஹரிணியின் கணவர் தாசேகவுடாவிற்கு தெரிய வந்த நிலையில், ஹரிணியின் செல்போனை பறித்துக் கொண்ட அவர், ஹரிணியும் வெளியே செல்ல முடியாதபடி செய்துள்ளார்.
ஹரிணியை தொடர்பு கொள்ள முடியாமல் கள்ளக்காதலன் யசஷ் தவித்து வந்துள்ளார். பின்னர் ஹரிணி - தாசேகவுடா இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட்ட நிலையில் மனைவியை நம்பி ஃபோனை கொடுத்துள்ளார். அப்போது யசஷ் அடிக்கடி போன் செய்த நிலையில், நாம் பிரிந்து விடலாம், தனது கணவன் தான் தனக்கு முக்கியம் என ஹரிணி பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் யசஷ் கடைசியாக ஒருமுறையாவது நேரில் வந்து சந்திக்க வேண்டும் என ஹரிணியிடம் கெஞ்சியுள்ளார்.
இதனால் யசஷ் புக் செய்த ஓட்டல் அறைக்கு சென்றுள்ளார் ஹரிணி. அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அதன்பிறகு எதிர்பாராத நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஹரிணியை 17 முறை குத்திய யசஷ் அங்கிருந்து தப்பியோடினார். இதில் ரத்த வெள்ளத்தில் ஹரிணி பலியானார். நீண்ட நேரமாக அறையில் நடமாட்டம் இல்லாததால் ஊழியர்கள் திறந்து பார்த்தபோது ஹரிணி இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில் தப்பியோடிய யசஷை கைது செய்துள்ளனர். கள்ளக்காதலை கைவிட முயன்ற பெண் கள்ளக்காதலனாலேயே குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K