இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த ஆண்டு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்தனர்.
தற்போது அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர். இருவரும் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடிவிட்டு ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விராட் கோலிக்கு 36 வயதும், ரோஹித் ஷர்மாவுக்கு 37 வயதும் ஆகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இதுபற்றி பேசும்போது “2027 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை அணியில் இருவரும் இடம்பிடிப்பது கடினமே. ஏனென்றால் ஆண்டுக்கு 15 ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடுவார்கள். என்னைப் போலவே அவர்களுக்கும் கிரிக்கெட் பற்றி நன்கு தெரியும் என்பதால் நான் அறிவுரை வழங்கத் தேவையில்லை. அவர்களின் ஓய்வு குறித்து அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.