இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. வழக்கமாக இந்தியா இங்கிலாந்து தொடர் பட்டோடிக் கோப்பை என்று அழைக்கப்படும். ஆனால் தற்போது அந்த தொடருக்கு டெண்டுல்கர்- ஆண்டர்சன் கோப்பை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இரு நாட்டைச் சேர்ந்த இரு ஜாம்பவான்களையும் கௌரவிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள ஆண்டர்சன் சச்சின் பெயருடன் தன் பெயரும் சேர்ந்திருப்பது கௌரவமானது எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பட்டோடியின் பெயர் மாற்றப்பட்டிருப்பது குறித்து பேசியுள்ள சச்சின் “இந்த தகவல் வெளியான போது நான் முதலில் பட்டோடி குடும்பத்தினரைதான் தொடர்பு கொண்டேன். இந்த தொடரில் பட்டோடி பெயர் நீடித்திருக்க என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று கூறினேன். அதன் பின்னார் பிசிசிஐ, ஜெய்ஷா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் என்னுடைய யோசனையைத் தெரிவித்தேன். அவர்களும் அதையேற்று கோப்பையை வெல்லும் கேப்டனுக்கு பட்டோடியின் பெயரில் பதக்கம் வழங்கப்படும் என அறிவித்தனர்” எனக் கூறியுள்ளார்.