இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது 38 வயதாகும் ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார். 2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதுதான் அவரின் தற்போதைய நோக்கமாக உள்ளது.
ஆனால் அதற்கான சூழல் இந்திய அணியில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் ஆஸ்திரேலியா தொடரோடு அவர் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். இதனால் அவர் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் நேற்றையப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ரோஹித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரராக இந்தியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்த தொடக்க ஆட்டக்காரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்திய அணிக்காக சேவாக் 15,758 ரன்கள் சேர்த்துள்ளார். ரோஹித் ஷர்மா 15,787 ரன்கள் சேர்த்துள்ளார். மூன்றாம் இடத்தில் சச்சின் 15,335 ரன்கள் சேர்த்துள்ளார்.