இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது 38 வயதாகும் ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார். 2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதுதான் அவரின் தற்போதைய நோக்கமாக உள்ளது.
ஆனால் அதற்கான சூழல் இந்திய அணியில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் ஆஸ்திரேலியா தொடரோடு அவர் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். இதனால் அவர் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் ரோஹித் ஷர்மாவிடம் இருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டது குறித்து பேசியுள்ள முகமது கைஃப் “ஷுப்மன் கில் தூங்க செல்லும் போது குற்றவுணர்ச்சியுடன்தான் தூங்க செல்வார். ரோஹித் ஷர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு எந்த தவறும் செய்யவில்லை என்பதை அவர் இப்போது உணர்ந்திருப்பார். ” எனக் கூறியுள்ளார்.