இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது 38 வயதாகும் ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார். 2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதுதான் அவரின் தற்போதைய நோக்கமாக உள்ளது.
ஆனால் அதற்கான சூழல் இந்திய அணியில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் ஆஸ்திரேலியா தொடரோடு அவர் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் அவர் தான் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியா தொடரில் விளையாடி வரும் அவர் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த இந்திய வீரர்களின் பட்டியலில் கங்குலியை முந்தி மூன்றாம் இடத்துக்கு சென்றுள்ளார். அவர் ஒரு நாள் போட்டிகளில் 11, 249 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு முன்பாக சச்சின் மற்றும் கோலி ஆகியோர் உள்ளனர்.