Publish Date: Thu, 28 Aug 2025 (15:04 IST)
Updated Date: Thu, 28 Aug 2025 (15:35 IST)
18 ஆண்டுகள் காத்திருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக் கோப்பையை வென்றது. ஆனால் அந்த சந்தோஷக் கொண்டாட்டத்தின் போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆர் சி பி அணி நிர்வாகிகள் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நகரின் மையத்தில் இருக்கும் சின்னசாமி மைதானத்தையே வேறு இடத்துக்கு மாற்றி விடலாமா என்ற அளவுக்கு விவாதங்கள் நடக்கின்றன. இந்நிலையில் பெங்களூருவில் புதிதாக மைதானம் உருவாக்குவது குறித்து கர்நாடக சட்டமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்ததில் இருந்து RCB அணி தங்கள் சமூகவலைதளத்தில் எந்த பதிவையும் பகிரவில்லை. இந்நிலையில் மூன்று மாதங்கள் கழித்து தற்போது அந்த பக்கத்துக்குப் புத்துயிர்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் “மூன்று மாதங்களாக மௌனமாக இருக்கவில்லை. நாங்கள் துக்கத்தில் இருந்தோம். இப்போது கொண்டாட வரவில்லை. RCB cares என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளோம். அது பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்” எனக் கூறியுள்ளனர்.