இந்திய அணிக்காக 15 ஆண்டுகளுக்கும் மேல் விளையாடிய ராகுல் டிராவிட் எந்தவொரு கோப்பையையும் வெல்லாமல் ஓய்வு பெற்றார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணிக்காக தன்னுடைய பங்களிப்பை அவர் கொடுத்துக் கொண்டுதானிருந்தார். இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக இருந்து அந்த அணியைக் கோப்பை வெல்லவைத்தார்.
அதன் பிறகு இந்திய அணிக்குப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவர் டி 20 உலகக் கோப்பையை வெல்லவைத்தார். அந்த வெற்றியோடு அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராகுல் டிராவிட் எப்போதும் தன்னுடைய நிதானமான குணத்துக்காக பாராட்டப்படுபவர். ஆனால் அவரே இப்போது பொறுமையிழந்து சாலையில் ஒரு ஆட்டோ ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. பெங்களூருவில் கன்னிங்ஹாம் சாலையில் அவர் சென்ற காரில் ஒரு சரக்கு ஆட்டோ மோதியுள்ளது. இது சம்மந்தமாக டிராவிட் அந்த ஆட்டொ ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். விபத்தில் டிராவிட் மற்றும் அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு எதுவும் ஆகவில்லை. இது சம்மந்தமாக இரு தரப்புமே புகார் எதுவுமளிக்கவில்லை என சொல்லப்படுகிறது.