Publish Date: Wed, 05 Feb 2025 (08:56 IST)
Updated Date: Wed, 05 Feb 2025 (08:58 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரில் அவர் மட்டும் இல்லாது போயிருந்தால் இந்திய அணி படுமோசமான தோல்வியைப் பெற்றிருக்கும். ஆனால் அவருக்கு பக்கபலமாக யாரும் இல்லாததால் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தோற்றது.
அந்த தொடரில் 32 விக்கெட்கள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதைப் பெற்றார். இதன் மூலம் தற்காலக் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவராக உருவாகியுள்ளார். ஆனால் அவரின் தனித்துவமான பவுலிங் ஆக்ஷன் காரணமாக அடிக்கடி காயமடைந்து வருகிறார். அத்தொடரின் இறுதிப் போட்டியில் காயம் காரணமாக அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் அவர் தற்போது நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் காயம் இன்னும் முழுமையாக குணமாகவில்லை என்பதால் இந்தமுடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அவர் பிப்ரவரி மாதம் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காவது அணிக்குத் திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.