பல ஆண்டுகளாக ஆர் சி பி அணியும் அதன் ரசிகர்களும் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த ஐபிஎல் கோப்பை, கைக்கெட்டும் தொலைவுக்கு இந்த முறை வந்துள்ளது. நேற்று நடந்த முதல் ஐபிஎல் குவாலிபையர் போட்டியில், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. வெறும் 102 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி, மிக எளிதில் பஞ்சாப் அணியை வீழ்த்தியவுடன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
பெங்களூர் அணியில் சுயாஷ் ஷர்மா மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர். இந்த போட்டியில் மிகச்சிறப்பாக பந்துவீசிய அவ்வணியின் சுழலர் சுயாஷ் ஷர்மா ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
இந்த சீசனில் இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர் சி பி 10 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இதில் 9 போட்டிகளில் அந்த அணியின் 9 வீரர்கள் ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளனர். அந்த அணியின் க்ருனாள் பாண்ட்யா, ரஜத் படிதார், பிலிப் சால்ட், டிம் டேவிட், விராட் கோலி, ஜோஷ் ஹேசில்வுட், ரோமாரியோ ஷெஃபர்ட், ஜிதேஷ் ஷர்மா மற்றும் சுயாஷ் ஷர்மா ஆகியோர் ஒவ்வொரு போட்டியிலும் ஆட்டநாயகன் விருதை வென்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.