Publish Date: Sun, 13 Apr 2025 (10:58 IST)
Updated Date: Sun, 13 Apr 2025 (11:29 IST)
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் 245 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை சேர்த்தனர்.
இதையடுத்து ஹைதராபாத் அணி 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமான தொடக்கம் அளித்தனர். அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் அடித்து மிகப்பெரிய சாதனை படைத்தார். அவர் பஞ்சாப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதனால் சன் ரைசர்ஸ் அணி மிக எளிதாக அந்த இமாலய இலக்கை எட்டியது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணி வீரர் மேக்ஸ்வெல்லின் செயல் ஒன்று கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரைக் கோபமாக்கியது. மேக்ஸ்வெல் பந்துவீசும் போது டிராவிஸ் ஹெட் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்ததாக அப்பீல் செய்தார். ஆனால் நடுவர் அதற்கு அவுட் கொடுக்கவில்லை. இதனால் மேக்ஸ்வெல் உடனடியாக DRS முடிவை எடுத்தார். ஆனால் தன்னைக் கேட்காமல் அவர் அந்த முடிவை எடுத்ததால் ஸ்ரேயாஸ் ஐயர் அதிருப்தி அடைந்து, கோபத்தை வெளிக்காட்டினார். கடைசியில் அந்த டி ஆர் எஸ்-லும் அது அவுட் இல்லை என்று தெரியவந்தது.