கடந்த சில ஆண்டுகளாகவே வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருந்தாலும் பெரிதாக எந்த வெற்றியும் பெறாமல் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். மேலும் அந்நாட்டு வீரர்களுக்கும் அந்த அணி நிர்வாகத்துக்கும் இடையே சம்பள பிரச்சனையும் நிலவி வருகிறது. இதனால் பல வீரர்கள் லீக் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தேசிய அணி பல தொடர்களை வரிசையாக தோற்று வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி 20 உலகக் கோப்பை தொடரைக் கூட காண அந்நாட்டு மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அந்த அணி அனைத்து போட்டிகளையும் இழந்து ஒட்டுமொத்த படுதோல்வியை சந்தித்துள்ளது.
இது சம்மந்தமாக பேசியுள்ள அந்நாட்டு முன்னாள் ஜாம்பவான் வீரர் லாரா “எங்கள் காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்குத் தேர்வாக வேண்டும் என்பதற்காக முதல் தரக் கிரிக்கெட் மற்றும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் விளையாடுவார்கள். ஆனால் இப்போது உலகெங்கும் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக தேசிய அணியை (வெஸ்ட் இண்டீஸ்) ஒரு கருவியாக வீரர்கள் பயன்படுத்துகிறார்கள். அவர்களை ஈர்க்கும் ஒப்பந்தங்கள் லீக் போட்டிகளில் உள்ளன. அதனால் நாம் வீரர்களைக் குறை சொல்ல முடியாது” எனப் பேசியுள்ளார். லாரா மறைமுகமாக ஐபிஎல் தொடரைதான் குறை சொல்கிறார் என்ற கருத்துகள் எழத் தொடங்கியுள்ளன.