இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக இருக்கும் பும்ராவுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பும்ரா ஐந்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது.
இப்படி பும்ரா மூன்று போட்டிகளில் மட்டும்தான் விளையாடுவார் என்பதை முன்பே அறிவித்தது தவறானது என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். மற்றொரு முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி பும்ரா இல்லாமல் விளையாடினால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கண்டிப்பாக தோல்விதான் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் பும்ராவுக்குக் கூடுதலாக சுமை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் “இந்திய அணி பும்ராவையே அதிகம் சார்ந்துள்ளது. அவருக்குக் கூடுதல் சுமை கொடுக்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்குத் தேவை. குல்தீப்பை அணிக்குள் கொண்டுவந்து பும்ராவின் சுமையைக் குறைக்கலாம்” எனக் கூறியுள்ளார்.