Publish Date: Wed, 20 Aug 2025 (14:27 IST)
Updated Date: Wed, 20 Aug 2025 (14:49 IST)
17 வது ஆசியக்கோப்பை (20 ஓவர்) போட்டிகள் செப்டம்பர் 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் இந்த போட்டிகளில் இந்தியா உட்பட 8 கிரிக்கெட் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடமளிக்கப்படவில்லை. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக டி 20 உள்ளிட்ட போட்டிகளில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்ரேயாஸுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அதற்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர்தான் காரணம் என்று ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆதரவாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது கிருஷ்ணாமச்சாரி ஸ்ரீகாந்த் இணைந்துள்ளார். அணித் தேர்வு சம்மந்தமாகப் பேசியுள்ள ஸ்ரீகாந்த் “ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடமில்லை என்று அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது. ஸ்ரேயாஸ் தற்போது இருக்கும் ஃபார்முக்கு அவர் கண்டிப்பாக அணியில் இருந்திருக்க வேண்டும். அவர் கடந்த ஐபிஎல் தொடரில் 600 ரன்களுக்கு மேல் அடித்து பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிவரை வழிநடத்தினார்” என அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.