சமீபகாலமாக இந்திய அணி தொடர்ந்து டெஸ்ட் தொடர்களை பரிதாபமாக தோற்று வருகிறது. இதற்கு கோலி மற்றும் ரோஹித் போன்ற மூத்த வீரர்கள் தொடர்ந்து சொதப்புவதுதான் காரணம் என்பது வெள்ளிடை மலை. இதனால் அவர்கள் ஓய்வு பெறவேண்டும் எனக் கருத்துகள் எழுந்துள்ளன.
இதன் காரணமாக சீனியர் வீரர்கள் உள்பட அனைவரும் சர்வதேசப் போட்டிகள் இல்லாத போது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. இதையேற்று ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தங்கள் மாநில அணிகளுக்காக விளையாடினர். அந்த வரிசையில் கோலியும் ரயில்வே அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
அவரது ஆட்டத்தைக் காண 25000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் குழுமினர். இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று அவர் பேட் செய்ய வந்த நிலையில் 15 பந்துகளை சந்தித்து 6 ரன்களில் ஸ்டம்ப் பறக்க தன்னுடைய விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடி சாதித்த கோலியை டெல்லி கிரிக்கெட் வாரியம் கௌரவிக்கும் விதமாக வெள்ளித்தட்டை பரிசாகக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது.