ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைக் கொண்டு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை தொடரை நடத்தி வருகிறது, ஆசியக் கிரிக்கெட் கவுன்சில், இந்நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசியக் கோப்பை தொடர் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 வடிவில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 20 ஆம் தேதி நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த தொடருக்கான அணியில் ஜாஸ்ப்ரீத் பும்ரா இடம்பெற மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனென்றால் அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் தொடர் நடக்கவுள்ள நிலையில் அந்த தொடரில் பும்ரா கவனம் செலுத்த ஆசியக் கோப்பை தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. காயம் மற்றும் பிட்னெஸ் பிரச்சனைகள் காரணமாக பும்ரா தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.