Publish Date: Thu, 23 Jan 2025 (09:29 IST)
Updated Date: Thu, 23 Jan 2025 (09:31 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நேற்று கொல்கத்தாவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதன்படி பேட்டிங் ஆடவந்த இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோஸ் பட்லர் தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பட்லர் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க அந்த அணி 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்களையும், அர்ஷ்தீப், ஹர்திக் மற்றும் அக்ஸர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 133 ரன்கள் என்ற இலக்கோடு பேட் செய்ய வந்த இந்திய அணி 13 ஆவது 3 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டி இமாலய வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில் வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
விருதைப் பெற்ற அவர் பேசும்போது “ஈடன் கார்டன் மைதானத்தில் பந்து வீசுவது சிரமமான விஷயம். நான் சைடு ஸ்பின் மூலம் நெருக்கடி கொடுக்க முடியாது என்பதால் மைதானத்தில் கிடைக்கும் பவுன்சை பயன்படுத்தினேன். அது பலனளித்தது. ஆனால் என் பவுலிங்குக்கு நான் பத்துக்கு ஏழு மதிப்பெண்தான் கொடுப்பேன். நான் இன்னும் நிறைய விஷயங்கள் சாதிக்க வேண்டியுள்ளது.” எனக் கூறியுள்ளார்.